விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

 

💖இதய நோய்கள்

ஸ்வீடன் நாட்டில் 45 - 83 வயதுக்கு உட்பட்ட 69,750 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், யாரெல்லாம் அடிக்கடி அதிகமான சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களைப் பருகுகின்றனரோ அவர்களுக்கெல்லாம் ஏழு விதமான இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

📹டார்க் எனர்ஜி கேமரா

பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் உதவியோடு வடிவமைக்கப்பட்டது டார்க் எனர்ஜி கேமரா. இது நம் பூமியில் இருந்து 1.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மெஸ்ஸியர் எனும் கேலக்ஸியை மிக அழகாக படம் எடுத்துள்ளது.

 

🔥சுவாசக் கோளாறுகளை உருவாக்கும்

அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலாந்து பல்கலை மேற்கொண்ட ஆய்வில், காட்டுத் தீயால் ஏற்படும் புகை பல ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி வாழ்பவர்களிடையே கூட சுவாசக் கோளாறுகளை உருவாக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

🍯சுற்றுச்சூழல் மாசுபாட்டை தெரிவிக்கும் தேன்

தேன் மிகச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள பல்வேறு சத்துக்கள் நம் உடலுக்கு மிகுந்த நன்மை தருபவை. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, தேனில் ஆபத்தான உலோகங்கள் கலந்திருப்பதாகக் கூறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ட்யூலேன் பல்கலை, அமெரிக்க நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து 260 வகையான தேன் மாதிரிகளைச் சேகரித்தது.

இதை ஆய்வு செய்து பார்த்த போது, அதில் நம் உடலுக்கு நஞ்சாகக் கூடிய ஆறு முக்கிய உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை லெட், ஆர்செனிக், கேட்மியம், நிக்கல், குரோமியம், கோபால்ட் ஆகியவை. இயற்கையிலேயே இந்த ஆபத்தான உலோகங்கள் இருக்கின்றன.

ஆனால், தொழிற்சாலை கழிவு வெளியேற்றம், பெட்ரோலிய சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் இவற்றின் அளவு சுற்றுச்சூழலில் அதிகரித்து வருகிறது.

தண்ணீர், நிலம் ஆகியவற்றில் இந்த உலோகங்களின் அளவு அதிகரிப்பதால், அதில் வளர்கின்ற தாவரங்களிலும் இவற்றின் அளவு கூடுகிறது. இந்த தாவரங்களின் பூந்தேனை எடுத்துத்தான் தேனீக்கள் தங்களுக்கான தேனை உருவாக்குகின்றன. எனவே, ஓரிடத்தில் கிடைக்கும் தேனை வைத்து அந்த இடத்தில் எந்த வகையான நச்சுகள் காணப்படுகின்றன; எந்த அளவுக்குச் சுற்றுச்சூழல் கெட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த தெளிவான பார்வை கிடைக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

🍫நீரிழிவுக்கு தீர்வாகும் டார்க் சாக்லேட்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு. இரண்டு வகைகள் உள்ளன. இதில் இரண்டாவது வகை வித்தியாசமானது.

இந்த வகை நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டால் கண் பார்வை, இதயச் செயல்பாடு ஆகியவை கூட பாதிக்கப்படும். மருத்துவர்கள் இது குறித்து எச்சரித்துள்ளனர்.

ஆனால், நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலை மேற்கொண்ட ஆய்வில், சாக்லேட் சாப்பிடுவது நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் என்றாலே அவர்கள் இனிப்பான பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று தானே சொல்வர்? இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிகமான பாலும், சர்க்கரையும் சேர்க்கப்பட்ட சாக்லேட் அல்ல. மாறாக இவை இரண்டும் குறைவான அளவில் இருக்கும் டார்க் சாக்லேட். அதாவது முழுக்க முழுக்க கோக்கோ பொருட்கள் மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது கசப்பாக இருக்கும் என்பதால் மக்கள் குறைவாகவே சாப்பிடுவர். ஆனால், இது மிகவும் ஆரோக்கியமானது. இதில் உள்ள ப்ளேவனாய்ட்ஸ் இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஹார்வர்டு பல்கலை ஆய்வு சொல்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெள்ளை சாக்லேட்டுகளைச் சாப்பிட்டால் உடல் எடை கூடுமே தவிர நல்ல பலன்கள் கிடைக்காது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment