திருக்குறள் தொடர்கிறது…
97.
மானம்
குறள்
961:
இன்றி அமையாச்
சிறப்பின ஆயினும்
குன்ற வருப
விடல்.
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய
செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா
உரை:
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது
என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு
வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
கலைஞர் உரை:
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய
செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல்
வேண்டும்.
English
Explanation:
Actions that would
degrade (one's) family should not be done; though they may be so important that
not doing them would end in death.
குறள்
962:
சீரினும் சீரல்ல
செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு
பவர்.
மு.வ உரை:
புகழோடு பெரிய ஆண்மையும்
விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா
உரை:
புகழுடன் தன் குடும்பப் பெருமையை
நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு
ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
புகழ்மிக்க வீர வாழ்க்கையை
விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான
காரியத்தில் ஈடுபடமாட்டார்.
English
Explanation:
Those who desire (to
maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake
of fame.
குறள்
963:
பெருக்கத்து
வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து
வேண்டும் உயர்வு.
மு.வ உரை:
செல்வம் பெருகியுள்ள காலத்தில்
ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத
உயர்வு வேண்டும்.
சாலமன் பாப்பையா
உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து
மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த
காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் உரை:
உயர்ந்த நிலை வரும்போது அடக்க
உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும்
வேண்டும்.
English
Explanation:
In great prosperity
humility is becoming; dignity, in great adversity.
குறள்
964:
தலையின் இழிந்த
மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக்
கடை.
மு.வ உரை:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய
நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர்
ஆவர்.
சாலமன் பாப்பையா
உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்
மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த
மயிரைப் போன்றவர் ஆவார்.
கலைஞர் உரை:
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த
இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச்
சமமாகக் கருதப்படுவார்.
English
Explanation:
They who have fallen
from their (high) position are like the hair which has fallen from the head.
குறள்
965:
குன்றின் அனையாரும்
குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய
செயின்.
மு.வ உரை:
மலை போல் உயர்ந்த நிலையில்
உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து
போய் விடுவர்.
சாலமன் பாப்பையா
உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து
மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.
கலைஞர் உரை:
குன்றினைப் போல் உயர்ந்து
கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப்
போய் விடுவார்கள்.
English
Explanation:
Even those who are
exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
குறள்
966:
புகழின்றால்
புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின்
சென்று நிலை.
மு.வ உரை:
மதியாமல் இகழ்கின்றவரின்
பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது,
வேறு பயன் என்ன.
சாலமன் பாப்பையா
உரை:
உயிர் வாழும் பொருட்டு மானத்தை
விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது.
மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?
கலைஞர் உரை:
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு,
மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத
சொர்க்கமா கிடைக்கும்?
English
Explanation:
Why follow men who
scorn, and at their bidding wait?
குறள்
967:
ஒட்டார்பின்
சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.
மு.வ உரை:
மதியாதவரின் பின் சென்று
ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல்
நல்லது.
சாலமன் பாப்பையா
உரை:
இகழுபவர் பின்னே சென்று அவர்
தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று
சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
கலைஞர் உரை:
தன்னை மதிக்காதவரின் பின்னால்
சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
English
Explanation:
It is better for a man
to be said of him that he died in his usual state than that he eked out his
life by following those who disgraced him.
குறள்
968:
மருந்தோமற்
றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து.
மு.வ உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை தன்
சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு
மருந்தோ.
சாலமன் பாப்பையா
உரை:
குடும்பப் பெருமைக்கான மானம்
அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து
ஆகுமோ?
கலைஞர் உரை:
சாகாமலே இருக்க மருந்து கிடையாது
அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக
ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.
English
Explanation:
For the high-born to
keep their body in life when their honour is gone will certainly not prove a
remedy against death.
குறள்
969:
மயிர்நீப்பின்
வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர்
மானம் வரின்.
மு.வ உரை:
தன் உடம்பிலிருந்து மயிர்
நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
சாலமன் பாப்பையா
உரை:
மயிர்எலாம் இழந்துவிட்டால்
உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால்
உயிர் வாழமாட்டார்.
கலைஞர் உரை:
உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால்
உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள்
உயிரையே விட்டு விடுவார்கள்.
English
Explanation:
Those who give up
(their) life when (their) honour is at stake are like the yark which kills
itself at the loss of (even one of) its hairs.
குறள்
970:
இளிவரின் வாழாத
மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும்
உலகு.
மு.வ உரை:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால்
உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
சாலமன் பாப்பையா
உரை:
தனக்கு இகழ்ச்சி வரும்போது
உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
கலைஞர் உரை:
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே
என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.
English
Explanation:
The world will (always)
praise and adore the fame of the honourable who would rather die than suffer
indignity.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment