பழகத் தெரிய வேணும் – 48

 


நேர்மறைச் சிந்தனை

`என்னமோ, என் வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லே,’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், மகிழ்ச்சி பிறரால் வருவதல்ல. ஒருவரது எண்ணத்தைப் பொறுத்தது.

கோயில் ஒன்றில் இலவச நாட்டிய வகுப்பு நடத்தப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதை நடத்தும் ஆசிரியையிடம் சென்றார் ஒருவர். அவருடைய மகளை அந்த வகுப்பில் சேர்ப்பதற்காக இல்லை.

முகத்தில் வருத்தத்தைத் தேக்கிக்கொண்டு, “இருக்கிறவங்க குடுக்கலாம். எங்களைமாதிரி இல்லாதவங்க என்ன செய்யமுடியும்?” என்று பூசை நடக்கும் இடத்திலேயே புலம்ப ஆரம்பித்தவர் ஓயவில்லை — “பேசுவதாக இருந்தால், அப்பால் செல்லுங்கள்,” என்று யாரோ ஒருவர் எரிச்சலுடன் மிரட்டும்வரை.

`பிறரைப்போன்று நாம் இல்லையே!’ என்று வருந்த ஆரம்பித்தால், இந்த உலகில் எவருக்குமே நிம்மதி கிடைக்காது.

பண வசதி இல்லாவிட்டால், அடுத்த தலைமுறையாவது தங்களைப்போல் கடினமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாம் என்று கல்வியில் ஈடுபடுத்துவதுதான் வசதி குறைந்தவர்கள் செய்யக்கூடிய செயல்.

தம்முடைய தீய பழக்கங்களைப் பழகிக்கொள்ள வேண்டாம் என்று தம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுபவர்களும் உண்டு.

மாறாக, ஓயாத சிந்தனை எதிர்மறையாகவே எழுந்தால் (`எல்லாம் என் தலைவிதி!’) சக்திதான் விரயம்.

தம் வருத்தத்தைக் கோபமாக மாற்றிக்கொள்வதால், குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரும் தொடர்ந்துவிடும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.

நம்மால் செய்ய முடிந்தது ஏதாவது இருக்காதா! அதை எண்ணி திருப்தி அடையாது, முடியாததைப்பற்றிய கவலை ஏன்?

அந்தக் கோயிலின் அருகே இருந்த ஏழை மாது ஒருத்தி தினமும் அதைப் பெருக்கி சுத்தப்படுத்துவாள். இன்னொருவர் கோயில் சுவற்றில் வெள்ளையடிப்பதுபோன்ற வேலையை தானாகச் செய்வார்.

இருவரும் எந்த லாபத்தையும் எதிர்பாராது, உடலுழைப்பை வழங்குகிறார்கள். `வசதி இல்லையே!’ என்று ஏங்குவதில்லை. அதனால் அவர்களுக்கு `நம்மால் முடிந்ததைச் செய்கிறோம்!’ என்ற திருப்தி கிடைக்கிறது.

(பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்களா, என்ன!)

நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற நப்பாசையுடன் ஆர்வமில்லாத துறையில் பட்டம் வாங்கி, உத்தியோகத்திலும் அமர்ந்தபின்னர் மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறவர்கள் பலர்.

வாய்த்த உத்தியோகத்தை நல்விதமாக வகித்தால்மட்டும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. அதைக் கெடுக்கவும் ஒருசிலர் இருப்பார்கள்,

 

கதை::

நான் ஆங்கிலத்தில் எழுதுவது என் மேலதிகாரியின் பொறாமையைக் கிளப்பிவிட்டது. அவளுக்குப் பிடிக்காத ஒருவரைப்பற்றி அவதூறாக எழுதச் சொன்னாள்.

`நீயே எழுதேன்,’ என்று நான் மறுக்க, முடிந்தவரை எனக்குத் தொந்தரவு கொடுத்தாள்.

அவள் அப்படி நடந்துகொண்டதில் என்மேல் தவறு இல்லை என்றவரை எனக்குப் புரிந்தது. இருந்தாலும், தினசரி வாழ்க்கையைக் கடப்பதே கடினமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் முதன்முதலாகக் காலெடுத்துவைக்கும் குழந்தை முரண்டுபிடிக்குமே, அந்த மனநிலையில்தான் இருந்தேன்.

நான் பட்ட அவதிகள் மட்டுமின்றி, பிறரது அனுபவங்களும் என் உணர்வுகளைப் பாதித்தால் அவற்றைச் சமாளிக்க நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். அவற்றை எழுத்துமூலம் வெளியிட்டபின், மனச்சுமை குறைந்தாற்போல் இருக்கும். அது ஒரு வடிகால். பிரசுரத்திற்காக அல்ல.

`பிறரிடம் கூறி ஆறுதல் அடையலாமே?’ என்றால், யாரை நம்புவது? நம் மீதே தப்பு கண்டுபிடிப்பார்கள்.

அப்படியே ஏமாற்றப்பட்டால் அனுபவம் என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

 

இனிமையான நினைவு ஒன்று

அதே பள்ளியில் என் சக ஆசிரியை மிஸஸ் சென் ஓய்வுபெறும் நாள் வந்தது. நான் அவளுடன் அதிகம் பேசியதுகூடக் கிடையாது.

ஆனால், என்னைத் தனியாக அழைத்து, “உன்னிடம் அபூர்வமான திறமை (rare talent) இருக்கிறது. அதனால் பிறர் பொறாமைப்படுகிறார்கள். Take it easy!” என்றாள், கனிவுடன். சம்பந்தப்பட்டவள் பெயரையோ, அவள் என்னைப் படுத்திய பாட்டையோ குறிப்பிடவில்லை.

நான் குழம்பிப் போயிருந்ததை அவள் கவனித்திருக்கிறாள்!

எனக்குப் புதிய பலம் வந்தது போலிருந்தது.

அதுவரை, `எல்லாரும்தான் பேசுகிறார்கள்; எழுதுவதும் அதுபோல்தானே! என்ன பிரமாதம்!’ என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

மிஸஸ் சென் பல்வித விளையாட்டுகளில் தேர்ந்தவள். அதனாலோ என்னவோ, நம்மை மறைமுகமாக எதிர்ப்பவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துவைத்திருந்தாள்.

மிஸஸ் சென்போலன்றி, புலம்புகிறவர்கள்தாம் உலகில் அதிகம். அவர்களுக்கு எத்தனையோ நல்லவை நடந்திருக்கும். ஆனால், நடக்காத, இயலாத, ஒன்றைப்பற்றியே பேசி மருகுவார்கள்.

 

ஏன் புலம்பல்?

`எளிது’ என்றெண்ணி ஒரு காரியத்தைத் தேர்ந்தெடுப்பதில் சில சங்கடங்கள் நேரும். தான் தேர்ந்தெடுத்த காரியம் தான் நினைத்தபடி இல்லையென்று தெரிந்ததும் மிரட்சியாக இருக்கும். `முடியும்,’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டு கடக்க வேண்டியதுதான்.

என்னுடன் படித்த பிருந்தா “எங்கள் வீட்டில் நான் படித்தது போதும் என்றார்கள். நான்தான் பட்டம் வாங்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏனடா சேர்ந்தோம் என்றிருக்கிறது,” என்று ஓயாது அலுத்துக்கொள்வாள்.

பிருந்தாவைப் போன்றவர்களுக்கு மாறும் எண்ணம் கிடையாது. மாறாக, தம்மைப்போல் இல்லாதவர்களுடன் இணைத்துக்கொள்வார்கள். அப்போதுதானே அவர்கள் மனதையும் கலைக்கமுடியும்?

அம்மாதிரியானவர்களுடன் அதிகம் பழகினால், நமக்கும் அந்தக் குணம் படிந்துவிடும் அபாயம் உண்டு.

`நல்லவேளை, நாம் இவர்களைப்போல் இல்லையே!’ என்று நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொள்ளவேண்டியதுதான்.

பால்யப் பருவத்தில் துயர் அனுபவித்தவர்கள் சந்தர்ப்பம் மாறியபோதும், எப்போதோ பட்ட வேதனையிலிருந்து மீளாது இருந்தால் அவர்களுக்கு என்றுதான் நிம்மதி?

 

கதை::

சிறுவயதிலேயே தாயை இழந்த ரவி, தந்தைக்கும் வேண்டாதவனாகப் போனான். பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, கேட்பாரில்லை என்று அவளும் அவனைக் கொடுமைப்படுத்தினாள்.

மூன்று வயதுப் பிள்ளை விஷமம் செய்கிறான் என்று அவனைக் கட்டில் காலில் கட்டிப்போட்டு விட்டதைப் பெருமையாக எல்லாரிடமும் சொல்லிக்கொள்வாள்.

எட்டு வயதில் ஒருவரின் தத்துப்பிள்ளையாகப் போனான். அங்கும் அசாத்தியக் கண்டிப்பு.

புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்த ரவி பெரியவனாகி, அமெரிக்காவில் நல்ல வேலையில் அமர்ந்தான்.

அவனுடைய குழந்தைபோன்ற நிராதரவான மனப்பான்மையால் எந்தப் பெண்ணின் தாய்மை உணர்வையும் எழுப்ப முடிந்தது. ஆனால், அறியாத வயதில், `தன்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று அடைந்த குழப்பம் அவனுக்குள் நிலைத்திருந்தது.

தன்னைக் காதலித்த ஒவ்வொரு பெண்ணையும் உடும்பாகப் பற்றிக்கொண்டான், `இவளுக்கும் நம்மைப் பிடிக்காது, விட்டுப் போய்விடுவாளோ?’ என்ற அச்சத்தால்.

அவனுடைய கட்டுப்பாடும், எப்போதும் சார்ந்திருக்கும் மனப்பான்மையும் பொறுக்காது பெண்கள் ஒவ்வொருவராக அவனை விட்டுப்போனார்கள்.

சிறுவயதில் அனுபவித்ததையே நினைத்துக்கொண்டிருந்ததால் அப்போது அவனிடம் அன்பு செலுத்தாதவர்கள்மேல் கொண்ட ஆத்திரமும் மாறவில்லை.

இதற்குத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள், “LIVE IN THE PRESENT” (கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துபோகாது, நிகழ்காலத்திலேயே இரு) என்று.

`இப்போது நான் சுதந்திரமானவன். அவர்களால் என்னைக் கஷ்டப்படுத்த முடியாது!’ என்று, நேர்மறைச் சிந்தனையுடன் தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டிருந்தால் காலமெல்லாம் துயர்ப்பட வேண்டாமே!

 

`முடிகிற காரியமா?’ என்கிறீர்களா?

 

அப்படியானால், இத்தகைய சிந்தனையை உறுதிப்படுத்தவென உளவியல் மருத்துவர்களை நாடலாமே!

::நிர்மலா ராகவன் எழுத்தாளர்-/-சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக....
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

திருக்குறள்... -/91/-பெண்வழிச் சேறல்

 

திருக்குறள் தொடர்கிறது





91. பெண்வழிச் சேறல்

👉குறள் 901:

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது.

மு.வ உரை:

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

சாலமன் பாப்பையா உரை:

மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

கலைஞர் உரை:

கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

English Explanation:

Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

 

👉குறள் 902:

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்.

மு.வ உரை:

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

கலைஞர் உரை:

எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

English Explanation:

The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;

 

👉குறள் 903:

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.

மு.வ உரை:

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:

நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

English Explanation:

The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.

 

👉குறள் 904:

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.

மு.வ உரை:

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

கலைஞர் உரை:

மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.

English Explanation:

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

 

👉குறள் 905:

இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.

மு.வ உரை:

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

சாலமன் பாப்பையா உரை:

தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

கலைஞர் உரை:

எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

English Explanation:

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

 

👉குறள் 906:

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்

அமையார்தோ ளஞ்சு பவர்.

மு.வ உரை:

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:

தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

கலைஞர் உரை:

அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

English Explanation:

They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.

 

👉குறள் 907:

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.

மு.வ உரை:

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

சாலமன் பாப்பையா உரை:

மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.

கலைஞர் உரை:

ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.

English Explanation:

Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs.

 

👉குறள் 908:

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங் கொழுகு பவர்.

மு.வ உரை:

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

கலைஞர் உரை:

ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.

English Explanation:

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

 

👉குறள் 909:

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ணேவல் செய்வார்கண் இல்.

மு.வ உரை:

அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

கலைஞர் உரை:

ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.

English Explanation:

From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.

 

👉குறள் 910:

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

மு.வ உரை:

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

கலைஞர் உரை:

சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.

English Explanation:

The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக...

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து: