திருக்குறள்... -/79/-நட்பு


திருக்குறள் தொடர்கிறது



79. நட்பு

👉குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

மு.வ உரை:

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

சாலமன் பாப்பையா உரை:

சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?

கலைஞர் உரை:

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

English Explanation:

What so sure defence 'gainst all that foe can do?

 

👉குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.

மு.வ உரை:

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

சாலமன் பாப்பையா உரை:

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

கலைஞர் உரை:

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

English Explanation:

The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.

 

👉குறள் 783:

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.

மு.வ உரை:

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.

கலைஞர் உரை:

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

English Explanation:

Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.

 

👉குறள் 784:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென் றிடித்தற் பொருட்டு.

மு.வ உரை:

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

கலைஞர் உரை:

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

English Explanation:

Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

 

👉குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.

மு.வ உரை:

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:

இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.

English Explanation:

Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

 

👉குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு.

மு.வ உரை:

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

கலைஞர் உரை:

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

English Explanation:

The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

 

👉குறள் 787:

அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.

மு.வ உரை:

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.

கலைஞர் உரை:

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.

English Explanation:

(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).

 

👉குறள் 788:

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

மு.வ உரை:

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

சாலமன் பாப்பையா உரை:

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

கலைஞர் உரை:

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.

English Explanation:

(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

 

👉குறள் 789:

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

மு.வ உரை:

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

கலைஞர் உரை:

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.

English Explanation:

Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).

 

👉குறள் 790:

இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

மு.வ உரை:

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:

இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.

கலைஞர் உரை:

நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

English Explanation:

Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear mean.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து:

0 comments:

Post a Comment