திருக்குறள்... -/67/-வினைத்திட்பம்


திருக்குறள் தொடர்கிறது



67. வினைத்திட்பம்

 

👉குறள் 661:

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.

மு.வ உரை:

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

கலைஞர் உரை:

மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

English Explanation:

Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

 

👉குறள் 662:

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

மு.வ உரை:

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை:

பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

கலைஞர் உரை:

இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

English Explanation:

Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.

 

👉குறள் 663:

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்.

மு.வ உரை:

செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

கலைஞர் உரை:

செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

English Explanation:

So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.

 

👉குறள் 664:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

மு.வ உரை:

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

சாலமன் பாப்பையா உரை:

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

கலைஞர் உரை:

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

English Explanation:

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said

 

👉குறள் 665:

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.

மு.வ உரை:

செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:

எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

கலைஞர் உரை:

செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.

English Explanation:

The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

 

👉குறள் 666:

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.

மு.வ உரை:

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

சாலமன் பாப்பையா உரை:

ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

கலைஞர் உரை:

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

English Explanation:

If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.

 

👉குறள் 667:

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கச்சாணி யன்னார் உடைத்து.

மு.வ உரை:

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

கலைஞர் உரை:

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

English Explanation:

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

 

👉குறள் 668:

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.

மு.வ உரை:

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

கலைஞர் உரை:

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

English Explanation:

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

 

👉குறள் 669:

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

மு.வ உரை:

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

கலைஞர் உரை:

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

English Explanation:

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).

 

👉குறள் 670:

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டா துலகு.

மு.வ உரை:

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை:

எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

கலைஞர் உரை:

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.

English Explanation:

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.


திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்... -/68/-வினை செயல்வகை:

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

0 comments:

Post a Comment