"அவளுக்கென்றொரு இலட்சியம் "-சிறு கதை

 


ஆதிகாலத்தில் வயல்வெளிகளிலும், சேரிப்புறங்களிலும், ஆங்காங்கே வாழ்ந்து வந்த மக்கள் தமது தேவைகள் கருதியும், ஒருவருக்கு ஒருவரான தொடர்புகளை இலகுவாக்கிக் கொள்ளவும், ஒரு இடத்தை மையமாக வைத்து கூடி வாழ்ந்தார்கள், அது காலப்போக்கில் ஊர், அல்லது கிராமம், என பல பெயர்களில் அழைக்கப்படலாயிற்று, பின்னர் காலம் செல்லச் செல்ல மனிதர்கள் தமது தேவைகள் அதிகரிக்க, அதிகரிக்க கிராமங்களிலிருந்து சற்று நகர்ந்து வாழத் தொடங்கினார்கள், அது காலப்போக்கில் நகரமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் சில கிராமங்கள் எதுவித முன்னேற்றங்களுமின்றி இலங்கையில் இருப்பதை காண்கிறோம். அப்படியான ஒரு கிராமம் தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக மட்டு நகரிலிருந்து சுமார் 35  கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது கோளறைப்பற்று (வாழைச்சேனை) பிரதேசமாகும், வாழைச்சேனைப் பிரதேசத்தில் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதிதான் நாசிவன்தீவு கிராமமாகும்.

 

இந்த கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடியாகும். அதிலும் குறிப்பாக 75சதவீதமானவர்கள் வாவி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனையவர்கள் கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கல்வி நிலைமையும் போதியளவில் இல்லை . ஒரே ஒரு பாடசாலை தான் இங்கு உள்ளது. அதுமட்டும் அல்ல,  இங்கு விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் படித்தவர்கள். அப்படியான இந்த கிராமத்தில் தான் மீரா என்ற உறுதியான பெண் வாழ்ந்தாள். அவள் தன் கிராமத்தில் வேறு எவரையும் போலல்லாமல், அவளது தளராத மனப்பான்மை மற்றும் அறிவுக்கான தீராத தாகத்துடன் காணப்பட்டாள்.

 

எனினும் அங்கு நிலவும் கல்வி வசதிகள் மிக மிக குறைவு. குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை, தளபாட வசதிகள், கட்டிட வசதி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான பொருட்கள் பற்றாக்குறை என பல சொல்லிக்கொண்டு போகலாம். இருப்பதோ ஒரே ஒரு பாடசாலை , அதுவும் உயர் வகுப்பு அங்கு இல்லை. இந்த சூழலில் தான் சிறு வயதிலிருந்தே, மீரா தனது கிராமத்தின் எல்லையைத் தாண்டிய ஒரு கனவைக் கொண்டிருந்தாள். பெண்களை பாரம்பரிய பாத்திரங்களுக்குள் கட்டுப்படுத்தும் ஒரே மாதிரியான மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை உடைத்து, ஒரு திறமையான விஞ்ஞானியாக மாற அவள் ஏங்கினாள். அவளுடைய தாழ்மையான படிப்பிற்கான ஆரம்பம் அவளுடைய அபிலாஷைகளை மட்டுப்படுத்தக்கூடாது என்று அவள் முழுக்க முழுக்க நம்பினாள்.

 

ஒவ்வொரு நாளும், மீரா தனது வீட்டிற்கு அருகிலுள்ள பழங்கால ஆலமரத்தின் அடியில் மணிக்கணக்கில் செலவழிப்பாள், அவள் முழு மன உறுதியுடன்  அவள் தந்தை மூலம் நகரத்தில் இருந்து பெற்ற புத்தகங்களில் ஆழ்ந்தாள். அவள் பக்கங்களைத் அறிவு பசிக்கு தின்று, பிரபஞ்சம், வேதியியல் மற்றும் கணிதம் பற்றி கற்றுக்கொண்டாள். அறிவியலின் அற்புதங்களை அவள் உள்வாங்கும்போது அவள் கண்கள் ஒளிர்ந்தன. தான் அவர்களைப்போல கிராமங்களுக்கு எதாவது  சொந்த கண்டுபிடிப்புகள் செய்து பங்களிப்பு அளிக்கவேண்டும் என்று நினைத்து உற்சாகத்தில் அவள் இதயம் மூழ்கியது.

 

மீரா வயதாகி உயர் வகுப்புக்கு நகரத்துக்கு போகவேண்டிய சூழல் வரும்பொழுது, ​​​ அவரைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து எதிர்ப்பையும் ஏளனத்தையும் எதிர்கொண்டார். ஆனால் மீரா அசையாமல் உறுதியாக இருந்தாள். நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய குலா இறைவிக்கான இலக்கிய பாடல் ஒன்றில் [In a hymn, the goddess Gula], ஒரு பெண்ணின் வாழ்க்கையின் நிலையை பின்வருமாறு விவரிக்கிறது: "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு வீட்டு காவலாளி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"]. அதே போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் தனது புறநானுறு 312 இல் "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" என்றும் குறுந்தொகை -135 இல் பெண்ணை 'மனை உறை மகளிர்' என்றும் கருதுகிறது. அந்த மனநிலையில் தான் அவளது அந்த கிராம மக்கள் பலர் இருந்தது கவலை அளித்தாலும், மீரா அவர்களை குறை கூறவில்லை.

 

உயர்வகுப்பில் மிக திறமையாக சித்தியடைந்த மீரா, சில அவளுடன் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களின் ஆதரவுடனும், பெற்றோரின் அசைக்க முடியாத ஊக்கத்துடனும், யாழ் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையைப் பெற்று, தனது கிழக்கு மாகாண கிராமத்தை விட்டு வெளியேறிய அவள், தனக்குக் காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக, தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்கினாள்.

 

மீராவிற்கு பல்கலைக் கழக வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. அவர் பெரும்பாலும் அறிவியல் வகுப்புகளில் ஒரே ஒரு பின்தங்கிய கிராமத்து பெண்மணியாக இருந்தார், இதனால் சில சமயங்களில் அவரது சகாக்களிடமிருந்து ஏளனத்தை எதிர்கொண்டார். ஆனால் மீராவின் அறிவின் மேல் உள்ள மோகம் அவளிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருந்தது. அவள் படிப்பில் சிறந்து விளங்கினத்துடன்,  தன் பாடம் சம்பந்தமான  ஆராய்ச்சி மற்றும் சோதனைகளில் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டாள்.

 

மீனவர்களிடையே தசைக்கூட்டு அறிகுறிகள் [musculoskeletal symptoms], தோல் கோளாறுகள் மற்றும் பார்வைக் குறைபாடு பொதுவாக அதிகமாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துவதை அறிந்த மீரா, அந்த துறையில்  தனது கவனத்தை கூடுதலாக செலுத்தினார். வருடங்கள் ஓடின, மீராவின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. அவர் தனது துறையில் ஒரு முன்னணி புகழ் பெற்ற வல்லுனராக மாறினார். தனக்கான தடைகளை உடைத்து, எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக தன் கனவை, இலட்சியத்தை அடைந்து எல்லோருக்கும் ஒரு உதாரணமாகவும், தன் கிராமத்துக்கு, அங்கு வாழும் அவளின் உறவுகளுக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

 

என்றாலும் மீராவின் பயணம் தியாகங்கள் இல்லாமல் இல்லை. அவள் தனது கிராமத்தின் வசதியையும், அவளுடைய குடும்பத்தின் அரவணைப்பையும், அவளுடைய கலாச்சாரத்தின் பரிச்சயத்தையும் வெகு தூரம் தவறவிட்டாள். ஆனாலும், அவளது அறிவின் நாட்டமும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவளது உறுதியும் என்றும் சோர்வடைய வில்லை.

 

இறுதியில், மீரா ஒரு புகழ்பெற்ற அறிஞராக, மருத்துவராக நாசிவன்தீவு உள்ளடங்கிய 32 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு (வாழைச்சேனை) க்கு திரும்பினார். மீராவின் இந்த இலட்சிய வெற்றி,  சமூக எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு உத்வேகம் கொடுக்கக் கூடியதாக அமைந்தது. அவர் தனது கிராமத்தில் ஒரு தனியார் மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் தனது பொருளாதார வசதிக்கு ஏற்ப தொடக்கத்தில் சிறிதாக நிறுவி உள்ளூர் இளைஞர்களுக்கு அறிவியல் உலகில் தங்கள் திறனை ஆராய வாய்ப்புகளை வழங்கினார்.

 

அவரது கதை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள் மூலம்  பரவி, தங்கள் சொந்த பாதைகளை செதுக்க விரும்பும் எண்ணற்ற நபர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அது மாறியது. தளராத மன உறுதியுடனும், தன்மீது உறுதியான நம்பிக்கையுடனும் இருந்தால், உயர்ந்த லட்சியங்களையும் அடைய முடியும் என்பதை நிரூபித்தவர், கனவு காணத் துணிந்த கிழக்கு மாகாண பெண்மணி மீரா என்ற புகழ் இலங்கை முழுவது பரவி, அவளுக்கும் அவளது கிராமத்துக்கும் பெருமை சேர்த்தது

 

நன்றி :[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment