சமூக ஊடகங்கள்: மனித மனத்தின் புதிய ஆளுமை மற்றும் உறவுகளின் மங்கல்

 சமூக ஊடகங்கள்: மனித மனத்தின் புதிய ஆளுமை மற்றும் உறவுகளின் மங்கல்



இன்றைய மனித வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் ஒரு துணை மட்டுமல்ல; அதன் மையமாக மாறிவிட்டன. நாம் எப்போது சிரிக்க வேண்டும், எதற்கு கோபப்பட வேண்டும், எதை விரும்ப வேண்டும் என்பதுவரை அந்தத் திரை மெளனமாகத் தீர்மானிக்கிறது. இதை பலரும் உணர்வதில்லை; ஏனெனில் இந்தக் கட்டுப்பாடு வலுக்கட்டாயமானதல்ல; அது மனதிற்கும் இனிமையானது.

கவனம் மற்றும் திரைக்கு அடிமை

சமூக ஊடகங்களின் முதன்மை இலக்கு மனிதனின் கவனம். கவனம் நீடித்தால், மனம் பழகும்; பழகினால், அடிமைபடும். இந்த உளவியல் வட்டத்திற்குள் இன்றைய மனிதன் மெதுவாக நுழைந்து விடுகிறான். ஒரு நிமிடம் மட்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கும் ஸ்க்ரோல், இரவில் பல மணி நேரங்களாக தொடர்கிறது.

சிறுகதை 1: “இன்னொரு நிமிடம்”

இரவு படுக்கையில் படுத்திருந்த அருண், “ஒரு நிமிடம் மட்டும்” என்று நினைத்து கைபேசியை எடுத்தான். ஒரு காணொளி, அடுத்தது, அதற்குப் பிறகு இன்னொரு ரீல்… கண்காணிக்காதபோது கடிகாரம் இரண்டரை மணி நேரத்தை கடந்திருந்தது.
அடுத்த நாள் அலுவலகத்தில் அவன் சோர்வாக இருந்தான். காரணம் வேலை அல்ல; முந்தைய இரவின் திரை.

இதன் விளைவாக, வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும்கூட பிள்ளைகள் திரையில் கவனம் செலுத்தி, குடும்ப உறவுகளின் நேரத்தை பறிக்கிறார்கள். ஒரு கூட்டத்தில் ஒருவரும் பேசுகிறாரா, யாரோ ஒரு நிகழ்ச்சி காட்டுகிறாரா என்ற போதும், திரை ஒளியில் மயங்கி, மனம் அங்கு மையமாகின்றது.

ஒப்பீட்டு மனநிலை மற்றும் உறவுகளின் மங்கல்

சமூக ஊடகங்களில் நாம் காண்பது வாழ்க்கையின் முழுமையான உண்மை அல்ல; அது தேர்ந்தெடுக்கப்பட்ட தருணங்களின் தொகுப்பு மட்டுமே. மனிதன் அதனை உணராமல், தன் அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தனிமையையும் குறைவானது போன்ற உணர்வையும் உருவாக்கிக்கொள்கிறான்.

சிறுகதை 2: “மீனாவின் அமைதி”

மீனா ஒரு ஆசிரியர். அவளுக்கு வாழ்க்கை சீராக இருந்தாலும், தினமும் சமூக ஊடகங்களில் பிறரின் வெற்றிகள், பயணக் கதைகள், அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் போன்றவை பார்த்ததும் மனம் பதட்டமாகும். அவள் தினசரி நேரத்தை திரையின்மேல் செலவழித்ததால், குடும்ப உறவுகளில் ஈடுபாடு குறைந்து, உறவின் இன்மையும் பாதிக்கப்பட்டது.

இது மட்டும் அல்ல; சமூக ஊடகங்களைச் சேர்ந்த பிள்ளைகளும், உறவினர்கள் வீட்டிற்கு வந்தாலும்கூட, திரையின் சிக்னலுக்கு அடிமையாகும் போது, அங்கே நிகழும் உரையாடல்கள், பகிர்வுகள், அன்பு பரிமாற்றங்கள் மெதுவாக மங்கி விடுகின்றன.

பாராட்டு, Like மற்றும் உளவியல் தாக்கம்

Like, Share, Comment ஆகியவை மெதுவாக சுயமரியாதையின் அளவுகோல்களாக மாறியிருக்கிறது. திரையின் விரல் அடிமைபட்டபோது, மனிதன் தனிப்பட்ட உறவுகளிலும் குறைவாக ஈடுபடுகிறார். இது குடும்ப உறவுகள், உறவினர்கள் இடையேயான நேசம், பரஸ்பர கவனம் ஆகியவற்றை மெதுவாக கெடுக்கிறது.

சிறுகதை 3: “சாப்பாட்டு மேசை”

ஒரு குடும்பம் சாப்பாட்டிற்கு கூடும். அப்போதும் பிள்ளைகள் திரையில் அமர்ந்து காணொளி பார்க்கிறார்கள். அருகில் அம்மா பேசினால், கவனம் திரையிலேயே இருக்கிறது; உண்மையான உரையாடல் குறைகிறது. உறவு விருத்தி குறைந்து, பாசமும் ஆதரவும் மெதுவாகத் தணைகிறது.

👉

சமூக ஊடகங்கள் அறிவையும், விழிப்புணர்வையும், இணைப்பையும் வழங்கினாலும், அளவில்லாத பயன்பாடு மனநலத்தையும் மனித உறவுகளையும் பாதிக்கிறது. வீடு என்பது உறவுகளின் தாய்; ஆனால் திரை அதனுடைய அண்டை அரசராக மாறும் போது, குடும்ப உறவுகள் மங்கும், மனமாற்றங்கள் உருவாகும்.

இன்றைய மனிதன் தன்னைத் தானே கேட்க வேண்டிய கேள்வி ஒன்று தெளிவாக உள்ளது:
நான் திரையைப் பயன்படுத்துகிறேனா, அல்லது திரை என்னைப் பயன்படுத்துகிறதா?”

இந்தக் கேள்விக்கு கிடைக்கும் நேர்மையான பதில்தான், நவீன மனிதனின் மனநலத்தையும் குடும்ப உறவுகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

 

தீபம் - உளவியல் / வாழ்வியல்

அஞ்செழுத்தின் உண்மை -ஆன்மிகம்

 (சிவவாக்கியர் –  சித்தர் சிந்தனை)


சிவவாக்கியம் -023

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.

தமிழ்ச் சித்தர் மரபு என்பது வழிபாட்டை மறுக்கும் மரபல்ல; வெற்றுவழிபாட்டை உடைக்கும் மரபு. அந்த மரபின் கூர்மையான குரல்களில் சிவவாக்கியர் தனித்த இடம் பெறுகிறார். அவர் பாடல்கள் பக்தியை இழிவுபடுத்துவதற்காக அல்ல; மனிதனை அடிமையாக்கும் மூடநம்பிக்கைகளிலிருந்து பக்தியை விடுவிப்பதற்காக.

"அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து…"

என்ற இப்பாடல், மனித வாழ்வின் உடல்–உணர்வு–ஆன்மா என்ற மூன்றையும் ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டுகிறது. இவ்வத்தியாயம், அந்த பாடலின் அடிப்படையில் இன்றைய பக்திமார்க்க சிந்தனைகளையும், சித்தர்கள் காட்டிய ஆரோக்கியமான மனித வாழ்வையும் ஒப்பிட்டு ஆராய்கிறது.


1. அஞ்செழுத்து – உடலின் அடிப்படைச் சூத்திரம்

"நமசிவய" என்பது வெறும் மந்திரமல்ல. அது மனித உடல் அமைப்பின் ஆன்மிகச் சுருக்கம்.

  • ந – நிலம் : உடலின் திடத்தன்மை
  • ம – நீர் : திரவ இயக்கம்
  • சி – தீ : ஜீரணம், சக்தி
  • வ – காற்று : சுவாசம், இயக்கம்
  • ய – ஆகாயம் : வெற்றிடம், உணர்வு

இந்த ஐந்து பூதங்களால் மனிதன் உருவாகிறான்; அவைகளால் தான் அவன் வாழ்கிறான். ஆனால் அவைகளின் இயல்புகளை அறியாமல், கட்டுப்படுத்தாமல், வெறும் வாயால் அஞ்செழுத்தை உச்சரிப்பதை சிவவாக்கியர் கடுமையாக விமர்சிக்கிறார்.


2. வெற்றுப் பக்தி – சித்தர்கள் மறுத்த வழி

இன்றைய பக்திமார்க்கம் பெரும்பாலும் வெளிப்புறமாகவே நிற்கிறது:

  • இடையறாத மந்திர உச்சரிப்பு
  • செலவு மிகுந்த பூஜைகள்
  • குறிப்பிட்ட நாட்கள், நேரங்கள், சடங்குகள்

ஆனால் இவை மனிதனின் உள்ளார்ந்த குணங்களில் மாற்றம் ஏற்படுத்துகிறதா?

சித்தர்கள் கேட்ட கேள்வி இதுதான்:

கோபம் குறைந்ததா? ஆசை அடங்கியதா? பயம் ஒழிந்ததா?

இவைகளில் மாற்றமில்லையெனில், அந்த பக்தி பழக்கமாக மாறுகிறது; உணர்வாக இல்லை.


3. மூடநம்பிக்கை – பயத்தின் மூலம் ஆளும் மார்க்கம் 

மூடநம்பிக்கை என்பது கடவுளின் பெயரில் பயத்தை விதைப்பது.

  • "இதைச் செய்தால் துன்பம் வரும்"
  • "அந்த நாளில் தொடங்காதே"
  • "அவன் பார்வை நல்லதல்ல"

இவை அனைத்தும் மனிதனை சிந்திக்க விடாமல், கீழ்ப்படிதலுக்குள் தள்ளும் கருவிகள்.

இவை ஆன்மிகத்துக்குரிய வழிகளுமல்ல 

சிவவாக்கியரின் ஈசன் அப்படி அல்ல.

"அஞ்சல்… அஞ்சல்…"

என்று அவர் ஈசனைப் பேசவைக்கிறார். பயத்தை அகற்றும் கடவுளே சித்தர்களின் கடவுள்.


4. ஒரேழுத்து – எழுத்தல்ல, உணர்வு

"அஞ்செழுத்தில் ஒரேழுத்து" என்பது ஒரு எழுத்தைக் குறிக்கவில்லை; அது ஒரு நிலை.

  • நான் என்ற அகந்தை கரையும் நிலை
  • பயம் இல்லாத நிலை
  • ஆசை, கோபம், பொறாமை அடங்கிய நிலை

அந்த நிலையில், ஐந்து பூதங்களும் ஒன்றாகி, அஞ்செழுத்து ஒரேழுத்தாகிறது. அதுவே சிவம்.


5. அம்பலம் – மனித உடலே அரங்கம்

சித்தர்களின் பார்வையில் அம்பலம் என்பது கோயிலுக்குள் மட்டுமல்ல.

  • மனித உடலே அம்பலம்
  • மனமே அரங்கம்
  • சுவாசமே நடனம்

இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு கோயில் மறுப்பில்லை; ஆனால் கோயில் அடிமைத்தனம் இல்லை.


6. ஆரோக்கியமான ஆன்மிக மனிதன்

சித்தர் சிந்தனை உருவாக்க விரும்பும் மனிதன்:

  • கேள்வி கேட்பவன்
  • அறிவியலை மறுக்காதவன்
  • மனிதனை மனிதனாக மதிப்பவன்
  • கடவுளை பயத்தின் கருவியாக மாற்றாதவன்

இது தான் சித்தர்கள் காட்டிய ஆரோக்கியமான ஆன்மிக வாழ்க்கை.



சிவவாக்கியர் பாடலில் ஈசன் அம்பலத்தில் ஆடுவது என்பது, மனிதனுக்குள் உணர்வு மலர்வதைக் குறிக்கும்.

அந்த உணர்வு வந்தால்,

  • பக்தி சுதந்திரமாகும்
  • வாழ்க்கை தெளிவாகும்
  • மனிதன் மனிதனாக உயர்வான்

அதுவே சித்தர் மரபின் இறுதி செய்தி:

பயத்தை விட்டு உணர்வை அடை.

-தீபம் ஆன்மிக வலம்