‘தீட்டெனும் திரையைத் தீயிடுவோம்!’ & ‘அழகு ஒரு மாயை’ ....

 


‘தீட்டெனும் திரையைத் தீயிடுவோம்!’

 

அன்பே வடிவான இறைவனைத் தொழும் நீ,

அன்பை மறந்து மனிதனை ஒதுக்குதல் அறமோ?

 

பிறந்தபோது தீட்டென்பாய்;

பேறுபெற்ற தாயினையும்

இறந்தபோது தீட்டென்பாய்;

ஈமக்கடன் செய்வோரையும்!

சிறந்ததெனக் கொண்டவிந்தப்

பிறப்பினைநீ சிதைக்கின்றாய்;

இறையவன் படைப்பினையே

இகழ்ந்துநீ ஒதுக்கின்றாய்!

 

துக்கமுற்ற வீட்டினரைத்

துயரினிலே ஆழ்த்திவிட்டுப்

பக்கமிருந்து தார்தழுவிப்

பகிராத பக்தி ஏன்?

மிச்சமுண்ண மறுக்கின்றாய்;

விருந்தினையும் தவிர்க்கின்றாய்;

அச்சமெனும் பெயராலே

அன்பினையே மாய்க்கின்றாய்!

 

உண்ணும் உணவினிலே

உயர்வினைநீ தேடுகின்றாய்;

மண்ணும் மனிதருமே

மாண்புடையார் அறிகில்லை!

புண்ணாகும் இதயத்தைப்

புறந்தள்ளி நீசெய்யும்

கண்ணற்ற வழிபாடைக்

கடவுள்தான் ஏற்பாரோ?

 

என்றோ செத்த மீனை

விழுங்குகிறாய்தீட்டு இல்லை;

என்றோ செத்த கோழியை

விழுங்குகிறாய்தீட்டு இல்லை;

எங்கோ சாகும் இன்னொருவனால்

எப்படி உனக்கு தீட்டு?

உயிர் போன உடலிலே

உணர்வு இல்லை என்றால்,

உயிரோடு உள்ள மனிதனை

ஒதுக்குவது நியாயமோ?

 

பிறப்பினையே தீட்டு என்று நிந்திக்கும்

மனிதனே நீ

பிறந்தநாளை நீ கொண்டாடப்

பெருமையுடன் உரிமையுண்டோ?

இறப்பை நீ அஞ்சுகின்றாய்;

இறப்பிலும் தீட்டென்று சொல்வாயே;

இரண்டு முனைகளிலும் இகழ்ந்துநீ

மண்ணில் இருப்பதற்கே அர்த்தமுண்டோ?

 

கண்ணீரைத் துடைப்பதுவே

கடவுளுக்கு காணிக்கை;

பசியனை ஊட்டுவதுவே

பரமபூஜை என்பதறி!

உயிரினில் அன்பு இல்லையெனில்

உயர்ந்தோன் நீயல்லையே;

உலகம் உனை ஏற்றாலும்

உள்ளம் உனை ஏற்றாதே!

 

மறமன்றி அறமில்லை

மனிதாபிமானமின்றிநீ

திறமின்றிச் செய்யும்

பூசை தீயினில் இட்ட மெழுகே!

 

அன்பே இறைவன் எனில்

அன்பை நீ வாழவிடு;

மனிதனை மதித்திடுவது

மகத்தான வழிபாடு!

அறமென்ற தீபமிட்டு

அனைவரையும் அணைத்திடு;

அதுவே உண்மை பக்தி என்று

அறிந்திடும் நாள் வருக!

-செ.மனுவேந்தன்

                                                  👉👈

 ‘அழகு ஒரு மாயை’

 

இன்று மின்னும் இந்த உடல் அழகு,

காலம் போக்கில் கரைந்து போகும்...

கண்ணில் தெரியும் இந்தத் தோற்றம்,

ஒருநாள் மெல்ல மறைந்து போகும்!

 

காமம் என்பது நெருப்பைப் போல,

கண்ணைத் மறைத்து அழித்துவிடும்...

உடல் மேல் கொள்ளும் மோகம் எல்லாம்,

உள்ளத்தை உருக்கிப் பிரித்துவிடும்!

 

அழியும் அழகை நம்பாதே - அது

அறிவை மயக்கும் ஓர் மாயை!

புறத் தோற்றம் என்றும் நிலைப்பதில்லை,

அது வெறும் கானல் நீர்ச் சாயை!

 

உடலைத் தாண்டி உயிரை நேசி,

உண்மைக் காதல் அதுவேதான்!

அழியா அன்பை இதயத்தில் வைத்தால்,

வாழ்வின் அர்த்தம் அதுவேதான்!

 

👉👈

'நிழலாக நெஞ்சில் நிறைந்திடும் நினைவுகள்'

 

சுவரில் படரும் பாசியாய்க் கடந்தகாலம்

சுமக்கும் கனவுகள் மகிழ்ச்சியின் கோலம்!

பிரிந்த உருவம் உள்ளத்தில் நிலைக்கப்

பழைய எண்ணங்கள் மனதில் இனிக்கும்!

 

கடந்து போன வசந்த காலங்கள்

கண்ணில் ஆடும் இன்ப உருவங்கள்!

நிலைத்து வாழும் என்றும் நம்முடன்

நிழலாக நெஞ்சில் நிறைந்திடும் நினைவுகள்!

 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்.