மனிதனைப் பிரிப்பதா மதம்? ஒன்றிணைப்பதா ஞானம்?

- ஆன்மிகச் சிந்தனையாளர்



தமிழ் ஆன்மிக மரபில், சடங்குகளின் சங்கிலிகளை உடைத்தெறிந்த மாபெரும் புரட்சித் துறவி சிவவாக்கியர். அவரது பாடல்கள் வெறும் பக்திப் பரவசங்கள் அல்ல; மனித மனத்தின் அறியாமை இருளைக் கிழிக்கும் அறிவுப் பேரொளிகள்; சிந்தனை வெடிகுண்டுகள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் சமுதாயத்தை நோக்கி எழுப்பிய கேள்விகள், இதோ இன்று இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அதிநவீன மனிதனின் முகத்திற்கு நேரே கண்ணாடியாய் நின்று உண்மையை உரக்கச் சொல்கின்றன.

அவரது புகழ்பெற்ற 046-வது பாடல், ஆன்மிகத்தின் உச்சக்கட்ட விடுதலையைப் பற்றிப் பேசுகிறது:

"சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்

சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்று நன்

முத்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்

வித்தை இத்தை ஈன்ற விதத்தில் விளைந்ததே சிவாயமே."

இந்தப் பாடல், மனிதன் தன் குறுகிய புத்தியால் உருவாக்கிய எல்லைகளையும் பிரிவுகளையும் தவிடுபொடியாக்கும் பேரறிவின் பிரகடனம் ஆகும்.

நான்என்ற அகந்தையின் சிறை

இன்றைய மனிதன் அறிவியல் தொழில்நுட்பத்தில் அண்டவெளியைத் தொட்டுவிட்டான். ஆனால், மன அமைதியில் ஒரு முழமாவது உயர்ந்திருக்கிறானா என்றால் கேள்விக்குறிதான். அவனது உள்ளம் ஆசை, போட்டி, பொறாமை, மத வெறுப்பு, சாதிப் பெருமை, பண அகந்தை ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது.

சிவவாக்கியர் பாடலின் துவக்கத்திலேயே சித்தம்”, “சிந்தை”, “சீவன் அற்று நிற்கும் நிலையைப் பேசுகிறார். அதாவது, ‘நான்’, ‘எனதுஎன்ற அகந்தையின் சிறைக்கதவுகள் உடையாதவரை மனிதன் உண்மையான ஆன்மிகத்தை எட்ட முடியாது. வெளியில் பிரம்மாண்டமான கோபுரங்களைக் கட்டும் மனிதன், தன் உள்ளுக்குள் சக மனிதனுக்கு எதிரான பகையையும் வன்மத்தையுமே வளர்க்கிறான். உதடுகளில் இறைவன் பெயர் உச்சரிக்கும்போதே, உள்ளத்தில் மனித வெறுப்பைச் சுமப்பது ஆன்மிகத்தின் ஆகப்பெரும் வீழ்ச்சி அல்லவா?

மதங்கள் மனிதனை இணைக்க வேண்டுமே தவிர பிரிக்க அல்ல!

இன்றைய உலகை உற்றுநோக்கினால், மதத்தின் பெயரால் வன்முறை, இனத்தின் பெயரால் வெறுப்பு, சாதியின் பெயரால் அவமதிப்பு என மனிதநேயம் சிதைந்து கிடப்பதைக் காணலாம். எந்தவொரு குழந்தையும் பிறக்கும்போது மதம், சாதி, இனம் என்ற முத்திரைகளோடு பிறப்பதில்லை. மனிதன்தான் அவனுக்குப் பின்னாளில் அடையாளங்களை ஒட்டி, எல்லைகளை வகுக்கிறான்.

ஆனால், உள்ளே ஓடும் உயிர் ஒன்றுதான் என்பதை உணர்த்தவே சிவவாக்கியர், சாதிபேத மற்று என்று மிக ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

பரம்பொருளின் பார்வையில்...

  • உயர்சாதி - தாழ்ந்த சாதி என்ற பேதம் இல்லை.
  • தூயவன் - அசுத்தன் என்ற பிரிவினை இல்லை.
  • அங்கே இருப்பதுமனிதன்என்ற ஒற்றைப் புள்ளி மட்டுமே.

இன்றும் கூட, ‘கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்; அவன் எல்லோருக்கும் பொதுவானவன்என்று பேசிக்கொண்டே, சக மனிதனைக் ஆலயத்திற்குள் அனுமதிக்க மறுக்கும் முரண்பாடுகளைச் சமூகத்தில் காண்கிறோம். இத்தகைய போலித்தனத்தைத்தான் சித்தர் பெருமான் சாடுகிறார்.

மந்திரம் சொல்லும் உதடு மனிதனை ஏன் இகழ்கிறது?

கோடி முறை மந்திரங்களை உச்சரிப்பதால் என்ன பயன், மனித நேயமும் கருணையும் வற்றிப்போய்விட்டால்? அதனால்தான், மூல மந்திரங்களும்... வித்தை இத்தை ஈன்ற விதத்தில் விளைந்ததே சிவாயமே என்கிறார். மந்திரங்கள் என்பவை மனதைத் தூய்மைப்படுத்துவதற்கான கருவிகளே தவிர, அவை மட்டுமே இறுதி உண்மை அல்ல.

என் மதமே உயர்ந்தது, என் கடவுளே உண்மையானவர், என் சடங்குகளே சிறந்தவைஎன்று மனிதர்களைப் துண்டு துண்டாகப் பிரிக்கும் பக்திமார்க்கம் ஒரு  போலி அது ஆன்மிகம் அல்ல . மனிதர்களை ஒன்றிணைப்பதே உண்மையான ஞானம்.

சமூக ஊடக காலத்தின்புதிய சாதிகள்

பழைய காலத்தில் சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் உருவானது. ஆனால், இன்று நவீன யுகத்தில் புதிய வடிவங்களில்சாதிகள்முளைத்திருக்கின்றன:

பழமைப் பிரிவினை

நவீன காலப் பிரிவினை (புதிய சாதிகள்)

பிறப்பு மற்றும் குலம்

பணக்காரர்ஏழை

பாரம்பரியச் சடங்குகள்

படித்தவர்படிக்காதவர் / நகரம்கிராமம்

வர்ணாசிரம முறை

சமூக ஊடகப் புகழ் (Followers) – சாதாரண மனிதன்

மனிதனை மனிதன் தரம் தாழ்த்தி அளக்கும் குணம் மட்டும் மாறவே இல்லை. ஒருவர் பயணிக்கும் கார், பயன்படுத்தும் நவீன கைபேசி, சமூக வலைதளங்களில் அவருக்கு இருக்கும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு மனித மதிப்பு கணக்கிடப்படுகிறது. இதுவும் ஒரு நவீன அகந்தை அமைப்பே அன்றி வேறில்லை.

உண்மையானசிவம்என்பது யாது?

சிவவாக்கியர் காட்டும்சிவம்என்பது ஒரு சிலையிலோ, குறிப்பிட்ட மத அடையாளத்திலோ, சடங்குகளிலோ மட்டும் சுருங்கிவிடுவது அல்ல. அது அகில உலகிலும், அண்டவெளியிலும், அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரறிவு.

  • பசியால் வாடும் மனிதனுக்கு அன்போடு சோறிடுவது,
  • துயரத்தில் தவிக்கும் ஒரு மனதிற்கு ஆறுதல் அளிப்பது,
  • சாதி, மத பேதமின்றி எவ்வுயிரையும் தன்னுயிர் போல் நேசிப்பது...

இதுவே உண்மையான சிவ வழிபாடு; இதுவே உன்னத ஆன்மிகம்.

மனித குலத்திற்குச் சித்தர் விடுத்த எச்சரிக்கை

இன்று மனிதன் விண்வெளிக்குச் சென்று வருகிறான்; செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குகிறான்; ஒட்டுமொத்த உலகையும் இணையத்தால் இணைக்கிறான். ஆனால், அவனால் பக்கத்து வீட்டு மனிதனின் மனதோடு இணைய முடியவில்லை. அதனால்தான், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் சிவவாக்கியரின் குரல் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது: "பிரிவுகளைத் தாண்டி உண்மையை உணருங்கள்!"

மனிதன் கடவுளுக்காகக் கோயில்களைக் கட்டினான்; ஆனால் கோயில்களில் கூட கடவுளின் ஆகச்சிறந்த படைப்பான மனிதனை நேசிக்க மறந்துவிட்டான்.

🌰...👉

சிவவாக்கியரின் 046-வது பாடல் நமக்கு உணர்த்தும் இறுதி உண்மை இதுதான்: மனிதனைப் பிரிப்பது மதமல்ல; மனிதனின் அறியாமையே.

சாதி, மதம், மொழி, இனம், சடங்கு போன்ற குறுகிய எல்லைகளைக் கடந்து, அன்பு, சமத்துவம், மனிதநேயம், அகந்தையற்ற வாழ்வு ஆகியவற்றை எப்போது மனிதன் தன் வாழ்வில் கடைப்பிடிக்கிறானோ, அன்றே அவன் உண்மையான ஞானத்தை அடைவான். அந்த உன்னத ஞானத்தை மனிதகுலம் உணரும் நாளே, இந்த பூமி உண்மையான அமைதியைக் காணும் திருநாள்!


தீபம் ஆன்மிகம் 

தொடர்கதை--:பாகம் 04- "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன்...

 இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" 



ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா பற்றி பல கதைகள் வாசித்த நாளில் இருந்து, எப்படியும் அவர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது. நாட்டியத்தில் சிறந்து விளங்கும், அழகான ஊர்வசி, ஹிமாலயத்தின் மகள் மற்றும் சக்திவாய்ந்த, மயக்கும் மேனகா, இந்து தொன்மவியலில், அழகின் அடையாளமாக கருதப்படும், தெய்வீக ரம்பா மற்றும் பிரம்மனால் உருவாக்கப்பட்ட, திகைப்பூட்டும் திலோத்தமா என்ற ஒரு எண்ணம் தான் என் மனதில் இருந்தது. அது சரியா பிழையா, இன்றுதான் அதை முடிவு செய்யப் போகிறேன். நான் என் மனையாளை, நேரத்துக்கு தகுந்தவாறு ' ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா' என்று கூப்பிட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

இந்த அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் உண்டு. அப்ஜம் என்றால் தாமரை. சரஸ் என்றால் தடாகம், குளம் என்று பொருள். அப்சரஸ் என்றால் தடாகத்தில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பையர்கள் ஆவர். ரம்பை தான் இவர்களின் தலைவியாக கூறப்படுகிறாள். இவர்கள் தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் எனவும், தாங்கள் என்றும் இளமை மாறாமல் இருக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்ட, அவரும் அவ்வரங்களை அளித்து, அவர்களுக்காக "அப்சரஸ்' எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார் என்று யாழ் மத்திய கல்லூரியில் படித்தது ஞாபகம் வந்தது.

அது போகட்டும், முதலில் எங்கே இசை எங்கே ஓடி விட்டான் என்று   பார்க்க வேண்டும் என்று துடித்தேன். உடனடியாக தேடிப்பார்க்க ஒரு டாக்ஸி தேடினேன், அங்கு அப்படி ஒன்றும் நான் காணவில்லை. அப்பத்தான் எனக்கு தெரிந்தது, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானையும்  இருக்கிறது என்று. நான் யானையை வரவழைத்து, என்னுடன் நாரதரையும் அழைத்துக் கொண்டு அங்கு இசையைத் தேடத் தொடங்கினோம்.

கொஞ்ச தூரத்தில் விநாயகர் எலிகள் புடைசூழ, வயிறை தடவி, தடவி,  மோதகம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். ஒரு மூலையில் முருகன் மயிலில் இருந்து இறங்கி, வள்ளியுடன் உலாவிக் கொண்டு இருந்தார். நாம் கிட்ட போனோம். இசை ஒரு எலியை கையில் பிடித்து வைத்துக் கொண்டு ரட் [Rat] ரட் என்று துள்ளி துள்ளி சொல்லியபடி, மயிலின் ஒரு இறகை பிடுங்கிக் கொண்டு இருந்தான். எங்களை கண்டதும், கையில் இருந்த எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, எலிபான்ட் [elephant] எலிபான்ட் என்று ஓடி வந்தான்.

நான் பின் இசையுடன் மண்டபத்துக்குள் நுழைந்தேன். வாசலில் நின்ற காவலாளி, நாரதர் கலகம் செய்வார் என்று உள்ளே விடவில்லை.      அங்கு அழகான ஊர்வசி, மயக்கும் மேனகா, தெய்வீக ரம்பா மற்றும் திகைப்பூட்டும் திலோத்தமா என நால்வரும் இந்திரன், பிரேமா விஸ்ணுவுடன் நின்றனர். சிவனும் பார்வதியும் தங்கள் முழு குடும்பத்துடன் வந்ததும் இரவு நடனம் ஆரம்பிக்கும் என்று அறிவித்தனர்.

அரம்பையர்கள் தேவலோகத்தில் மொத்தம் 60,000 பேர் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. என்றாலும் இது ஒரு தனிப்பட்ட ஒழுங்கு என்பதால், தேர்ந்து எடுக்கப்பட்ட சிலரை மட்டும் அங்கு உள்ளே வர அனுமதித்தனர். அவர்களில் கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை ஆகிய மூவரும் எங்களை வரவேற்று, முன் வரிசைக்கு அழைத்து சென்றனர். இசைக்கு கொஞ்சம் உயர்ந்த இருக்கை கொடுக்கப்பட்டது.

நால்வரின் அசைவுகள் பண்டைய கதைகளைச் சொன்னது  - அன்பு மற்றும் ஏக்கம், தைரியம் மற்றும் தியாகம். "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர", என்ற விதியின் படி அப்படியே இருந்தது. அதுமட்டும் அல்ல, 'பண்வழி நடக்கும் பாட்டின் போக்கும், பாட்டின் வழியே தாளம் பயிலும், தாள வழியே காலடி தட்டும்' பண்ணின் சிறப்பினைப் பாடலும், பாடலின் போக்கைத் தாளமும், தாளத்தின் அமைப்பில் ஆடலும் இணைந்து சிறந்து அங்கு விளங்கியது. கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் அங்கு வேளை இருந்தது.  "பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் " என்பது போல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினார் நால்வரும்! ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து, என்பதை நான் முற்றிலும் அங்கு கண்டேன் !

 

நீரானவா நிலமானவா விண்ணானவா

காற்றானவா ஒளியானவா உயிரினவா

பிரபஞ்சத்தை ஆளும் முழுமுதற்க் கடவுளே!

 

நீயே உயிர்கெல்லாம் முதலானவன்

எல்லா உலகத்துக்கும் உறவானவன்

உயிர்கள் கூடி  தாளம்போடும் இசையானவன்

எம்மை எந்நாளும் தொடர்கின்ற நிழலானவன்

 

நதியில் நீராகி நிலவெல்லாம் ஒளியாகி

பனியில் துளியாகும் இறையானவா

புவியில் திறனாகி உயிரெல்லாம் கருவாகி

காற்றில் அசைந்தாடும் நிறைவானவா

வரம் வேண்டியே உனைப் பாடினோம்

சத்தியம் வாழவே நாம் மகிழ்ந்தாடினோம் !

 

சலங்கை ஒலியாக  சரிந்தாடும் மயிலாக

தாளத்தின் உயிராக நாம் நடமாடினோம்

சபையில் இனிதாக இதம்தேடும் முகமாக

இதயம் கலந்தோரை நாம் புகழ்ந்தாடினோம்!

இசை தனது மகிழ்ச்சியில் தனது சிறிய கைகளைத் தட்டினார். என்னுடைய இதயமும் மீண்டும் இளமையாக மாறியது போல உணர்ந்தேன். என் கால்கள் என்னை அறியாமலே தாளங்களுக்கு ஒத்ததாக கால்களைத் தட்டியது.

நடனத்திற்குப் பிறகு, நாங்கள் நான்கு அப்சரஸ்களுடன் இறுதி இரவு உணவைப் பகிர்ந்து கொண்டோம் - அமிர்தத்தில் தோய்த்த பழங்கள், மணம் கொண்ட பிரியாணி மற்றும் முத்துக்கள் போல ஒளிரும் பால்.

ரம்பா மிக அருகில் வந்து, சிரித்துக்கொண்டே, “கந்தையா தில்லை, நீ இனி பூமி போக வேண்டும். வரலாற்றில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேச பூமிக்கு உன்னைப் போன்ற எழுத்தாளர் தேவைஎன்றாள்.

ஊர்வசி இசையிடம் சாய்ந்து, “மழலையே , உன் புன்னகையால் அன்பு மற்றும் உறவு பாலங்களைக் கட்டுவாய்என்று கிசுகிசுத்தாள். திலோத்தமா அடி மேல் அடி எடுத்து வந்து இசைக்கு திகைப்பூட்டி விளையாட தொடங்கினாள். அந்த இடைவெளியில், தன் அழகு, கவர்ச்சி, இளமை மூன்றையும் கலந்து எடுத்து, மேனகா எனக்கு ஒரு மயக்கம் தந்தாள்!. நல்ல காலம், அங்கே திடீரென புத்தர் வந்தார். அவர் கொஞ்சம் சத்தமாக ' ஒரு மனிதன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை இருக்கும் வரை, அவன் மனம் வாழ்க்கையை பற்றிக் கொண்டிருக்கும். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு மக்கள் நெடுங்காலம் துயரத்தை அனுபவிக்கிறார்கள்' என்று கூறிக் கொண்டு என்னிடம் வந்தார். நானும் மயக்கத்தில் இருந்து விழித்து என்னை அறிந்தேன். அப்சரஸ் நால்வரும் உடனடியாக மிதந்து மெதுவாக மறைந்தனர். அவர்களுடன் சேர்ந்து மேகங்களும் மறைந்தன.

தங்க ஒளி மங்கியது. காலை சூரிய ஒளி படுக்கையறைக்குள் பாய்ந்தது.

கதவில் யாரோ தட்டும் ஒலி காதில் கேட்டது. ஒருவேளை மேனகா திரும்பி வந்தாளா என்ற ஒரு நற்பாசையில், மெல்ல எழுந்து போய் கதவைத் திறந்தேன்.

"அப்பா, எழுந்திரு! வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இசையை டேகேர்ல [Daycare] விடணும்" மூத்த மகளின் குரல் கேட்டது.

நான் கண்டும் காணாதது போல் மௌனமாக இருந்தேன். இசை  இன்னும் மடியில் சுருண்டு, தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

எனக்குள் இன்னும் எதோ ஒரு குழப்பம், "அது ஒரு கனவா? அல்லது மறுபக்கத்திலிருந்து வந்த ஒரு நினைவா?"

இசை விழித்தெழுந்ததும், மேலே பார்த்து மெதுவாகச் சொன்னான், "தாத்தா, அடுத்த கோடையிலும் நாம் சொர்க்கத்திற்கு போகலாமா?"

நான் சிரித்து, அவனது நெற்றியில் முத்தமிட்டு, "நிச்சயமாக, என் குட்டி  நட்சத்திரமே. ஆனால் இன்று நீங்கள் உங்கள் காலை உணவை மிச்சம் விடாமல் முடித்துவிட்டால் மட்டுமே" என்றேன்.

வானத்திற்கு அப்பால் ஒரு அசாதாரண விடுமுறைக்குப் பிறகு, ஒட்டாவாவில் மீண்டும் மற்றொரு சாதாரண நாள் தொடங்கியது!

 

புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று

புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான்

புற்றுநோய் போல் அது பரவி

புரியாத எம்மை வலைக்குள் வீழ்த்திவிட்டது!

 

நீச செயல்களை என்றும் செய்யாது

நீதி செய்தால் உலகம் வரவேற்கும்

நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும்

நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சேர்க்கும்!

 

புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே

சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே

முற்பிறவியில் எவனோ செய்த கர்மாவுக்கு

இப்பிறவியில் உனக்கு தண்டனை வேடிக்கையே!

 

மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது

மதிக்கப் படுகிறாய் போற்றப் படுகிறாய்

மகிழ்ச்சியும் இன்பமும் அங்கே பிறக்கிறது

மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!

 

[முடிவுற்றது]

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்